விரோதத்திற்கு வித்திட்ட பயணம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-3) – நிராஜ் டேவிட்

இந்தியாவிற்கு எதிராக புலிகளை களம் இறங்கும்படி செய்த மற்றொரு சம்பவம், இந்தியப் படைகளின் நேரடித் தலையீடு இலங்கையில் ஏற்பட்ட பின்பு இடம்பெற்றிருந்தது.
‘ஒப்பரேஷன் பூமாலை| நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.
ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் குள்ளநரித் தந்திரத்துடனும், இந்தியாவின் பூகோள நலனை நோக்காகவும் கொண்டும் தயாரிக்கப்பட்டிருந்த இந்த ஒப்பந்த யோசனைகள் பற்றி புலிகளுக்கு எதுவும் முதலில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
அக்காலத்தில் ஈழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே நின்று போராடிக்கொண்டிருந்தார்கள். ‘ஈரோஸ்| அமைப்பு தவிர மற்றய ஈழ இயக்கங்கள் அனைத்தும் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தன.
புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமன்னில் தமது தலமையகத்தை அமைத்து, ஈழ மண்ணிலேயே நிலைகொண்டிருந்தார்.
இந்த ஒப்பந்தம் பற்றி பிரபாகரன் அவர்களுக்கு அறிவித்து அவரது ஒப்புதலையும் எப்படியாவது பெற்றுவிடுவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி திட்டம் தீட்டினார். இந்த ஒப்பந்தம் பற்றி திரு.பிரபாகரனுடன் நேரடியாகப் பேசுவதற்காக திரு.பிரபாகரனை புதுடில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்தியாவின் உதவிப் பொருட்களை யாழ்பாணம் கொண்டு சென்ற ஹர்தீப் பூரி, கப்டன் குப்தா என்ற இந்திய தூதரக அதிகாரிகள் மூலமாக இந்த அழைப்பு திரு.பிரபாகரனுக்கு விடுக்கப்பட்டிருந்தது.(இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் துறை உயரதிகாரியாகக் கடமையாற்றியவர்தான் ஹாதீப் பூரி. இந்திய பாதுகாப்புத்துறை சம்பந்தமான நடவடிக்கைளுக்கு பொறுப்பான அதிகாரியாக இந்திய தூதரகத்தில் கடமையாற்றிய அதிகாரிதான் கப்டன் குப்தா)

ஸ்ரீலங்கா அரசிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்படப்போகின்றது என்றும், ‘விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள்| என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அந்த இந்திய அதிகாரிகள் புலிகளிடம் தெரிவித்தார்கள்.


“தமிழீழத்தை கைவிடும் எந்தவொரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள்|| என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
19.07.1987 இடம்பெற்ற இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பல தடவைகள் இந்திய அதிகாரிகளுக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
தவிர்க்க முடியாமல் இந்திய நேரடித் தலையீடுகள் ஈழப் பிரச்சனையில் ஏற்பட்ட பின்னர், அதனை எப்படியாகிலும் எதிர்கொண்டேயாகவேண்டிய கட்டாயம் புலிகளுக்கு இருந்தது. அதனால் இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா பயணமாக புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியில் தீர்மானித்தார்.
இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணமாக விமர்சகர்களால் கருதப்பட்ட பிரபாகரனின் அந்த இந்தியப் பயனம், 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்காப்பரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.

ஏமாற்றப்பட்ட தமிழ் இயக்கங்கள்
புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு புலிகளின் தலைவர் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கமாட்டார் என்பதை நன்கு உணர்ந்திருந்தது. ஆனாலும் மிகவும் பலம் வாய்ந்த அமைப்பு என்ற ரீதியிலும், அப்பொழுது ஈழமண்ணில் நிலைகொண்டிருந்த ஒரே அமைப்பு என்ற ரீதியிலும் புலிகளை இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது ஏற்றுக்கொள்ளவைத்துவிட வேண்டும் என்பதில் ராஜீவ் காந்தி திண்ணமாக இருந்தார். அதனால் புலிகளை இணங்க வைக்க அவர் சில தந்திரங்களை கையாண்டார்.

தமிழ் இயக்கங்களுக்கு இடையே அக்காலங்களில் காணப்பட்ட முரன்பாடுகளை கனகச்சிதமாக தனது திட்டத்திற்கு பயன்படுத்த ராஜீவ் காந்தி தீர்மாணித்தார். ( இப்படி, இந்தியாவிற்கு சாதகமான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன்தான் இந்தியாவின் ‘றோ| புலனாய்வு அமைப்பு ஆரம்பத்தில் ஈழப் போராட்ட அமைப்புக்களிடையே விரோதத்தை திட்டமிட்டு வளர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. – இந்த விடயங்கள் பற்றி ஏற்கனவே இத்தொடரின் 5ம் அத்தியாயத்தில் விரிவாகத் தெரிவித்திருந்தேன்.)
ஈழமண்ணில் இருந்து வெளியேறி தமிழ் நாட்டில் இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், டெலோ, ஈ.என்.டீ.எல்.எப்., த.வி.கூட்டணி போன்ற அமைப்புக்களை அழைத்த ராஜீவ் காந்தி, இந்திய இலங்கை உத்தேச ஒப்பந்தத்திற்கு இந்த இயக்கங்கள் தமது முழு ஆதரவைத் தருவதாக அவர்களது சம்மதத்தைப் பெற்றார். இதற்காக இந்திய அதிகாரிகள் மேற்கொண்டிருந்த தந்திர நடவடிக்கையையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

இயக்கங்களுக்கு இடையிலான மோதல்கள், இயக்கங்களின் உள்ளேயான பிளவுகள், ஈ.என்.டீ.எல்.எப். போன்ற புதிய அமைப்புக்களின் தோற்றங்கள் போன்றவற்றை கவணத்தில் எடுத்து, சரியான தருனத்தில் இந்தியத் தரப்பால் காய் நகர்த்தப்பட்டது.
இந்த இயக்கங்களின் தலைமைகளையும், பிரதிநிதிகளையும் தனித்தனியாக சந்தித்த இந்திய அதிகாரிகள் தமது ஒப்பந்தம் பற்றி விளக்கம் அளித்ததுடன், ஒப்பந்தத்தின் பிரதிகளையும் கொடுத்திருந்தார்கள். அத்தோடு இயக்கங்களின் மாற்று அமைப்புக்கள் அல்லது அந்த குறிப்பிட்ட இயக்கங்களில் இருந்து பிரிந்திருந்த அணியினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றும் மற்றய இயக்கங்களிடம் கூறிவைத்தார்கள்.
உதாரணத்திற்கு ‘புளொட்| அமைப்பினரைச் சந்தித்த இந்திய அதிகாரிகள், அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றிருந்து பரந்தன் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று கூறியிருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையைச் சந்தித்த இந்திய அதிகாரிகள், அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றிருந்த டக்ளஸ் தேவாணந்தா அணியினர் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு செயற்படத் தயார் என்று அறிவித்துவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்கள். இதேபோன்று டெலோவிடம் சென்ற அதிகாரிகள், “புளொட் அமைப்பு ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு ஆதரவு வழங்க ஒப்புக்கொண்டுவிட்டது|| என்று தெரிவித்திருந்தார்கள். இப்படி ஒவ்வொரு இயக்கத்திடமும் மாற்றிமாற்றி கூறி இந்தியா தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

அக்காலத்தில் புலிகள் அமைப்பால் தடைசெய்யப்பட்ட நிலையில் இந்தியாவின் தயவை மட்டுமே முற்று முழுதாக நம்பியிருந்த இந்த இயங்கங்களோ, தமது மாற்று இயக்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தாம் இதனை ஏற்காது போனால், எங்கே இந்தியா தம்மை கைகழுவிவிட்டுவிடுமோ என்கின்ற பயத்தில், இந்தியாவின் திட்டத்திற்கு பலியாகின.
அக்கால கட்டத்தில், தமது கொள்கைகளையும், கட்டுப்பாடுகளையும் இழந்த நிலையில், பெயருக்கு இயக்கம் நடத்திக்கொண்டிருந்த இந்த இயக்கத் தலைமைகள், இந்தியாவின் வலையில் தெரிந்துகொண்டே விழுந்தன. அத்தோடு இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதைத்; தவிர இந்த இயக்கங்களுக்கு அப்பொழுது வேறு மார்க்கங்கள் எதுவும் இருக்கவில்லை.

26.07.1987 அன்று, தமிழ் அரசினர் விருந்தினர் விடுதியில் தமிழ் இயக்கத் தலைவர்களுடன் இந்த ஒப்பந்தம் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் அழைக்கப்படவில்லை. இந்தியத் தரப்பில், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கே.பி.எஸ்.மேனனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தீக்ஷித்தும் பங்கு பற்றினார்கள். ஒப்பந்தம் பற்றிய விளக்கத்தை தமிழ் இயக்கத் தலைவர்களுக்கு வழங்கிய அவர்கள், நயவஞ்சகமான ஒரு பொய்யை கூறினார்கள். புலிகள் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாக மற்ற அமைப்புக்களிடம் தெரிவித்தார்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதில் தமிழ் இயக்கங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச தயக்கமும் இதனால் உடைக்கப்பட்டது. இறுதியில் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் தீர்மாணத்தை அனத்து தமிழ் இயக்கங்களும் எடுத்தார்கள்.
‘புலிகளே இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் தாம் இதனை ஏற்காது அடம் பிடித்தால், தமது அமைப்புக்கள் ஓரங்கட்டப்பட்டுவிடும்ளூ ஏற்கனவே அழியும் தறுவாயில் நின்றுகொண்டிருக்கும் தமது இயக்கங்களை இந்தியாவும் கைவிட்டால் முற்றுமுழுதாகவே அழிந்துவிடுவோம்| என்று நினைத்த இயக்கங்கள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுச் செயற்படும் தீர்மானத்தை எடுத்தன.

இதேவேளை, ஒப்பந்தத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறப்பட்ட விடுதலைப்புலிகளோ, உண்மையிலேயே ஒப்பந்தம் பற்றி எதுவும் அறிந்திராத நிலையில் புது டில்லியில் தங்கியிருந்தனர்.
‘புதுடில்லியில் தங்கியிருந்தார்கள்| – என்று கூறுவதைவிட, ‘புதுடில்லியில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள்| என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்