மட்டக்களப்பில் புளொட் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-89) – நிராஜ் டேவிட்

13.09.1987 அன்று மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.
இந்தியப் படையினர் ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பில் நடைபெற்ற முதலாவது தாக்குதல் என்று இதனைக் கூறலாம்.
இந்தத் தாக்குதலில் ‘புளொட்| அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.

‘புளொட்| அமைப்பின் அரசியல் துறைச் செயலாளர் வாசுதேவா, இராணுவத்துறைச் செயலாளர் கண்ணன், மட்டக்களப்பு பொறுப்பாளர் சுபாஸ், ஆனந்தன் போன்றவர்கள் உட்பட, இந்தியாவில் இருந்து அப்பொழுதுதான் இலங்கை திரும்பியிருந்த முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள்.
புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள் மீது புலிகள் மேற்கொண்ட இந்தத் தாக்குதலானது அந்தக் காலகட்டத்தில் மாத்திரமல்ல, தற்பொழுது கூட அதிகம் சிலாகிக்கப்படுகின்ற ஒரு தாக்குதல் என்றால் மிகையில்லை.
பேச்சுவார்தைக்கு என்று அழைக்கப்பட்ட புளொட் முக்கியஸ்தர்கள் புலிகளால் நயவஞ்சகமாகப் படுகொலைசெய்யப்பட்டதாக இந்தத் தாக்குதல்பற்றிய ஒரு பேச்சு தற்பொழுதும் இருந்துகொண்டிருக்கின்றது.

புளொட் முக்கியஸ்தர்கள் மீதான தாக்குதல் இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோவினாலேயே உத்தரவிடப்பட்டு புலிகளால் மேற்கொள்ளப்பட்டதான ஒரு குற்றச்சாட்டு அந்த நாட்களில் புளொட் அமைப்பினரால் வெளியிடப்பட்டிருந்தது. புளொட் முக்கியஸ்தர்களது நடமாட்டம் பற்றிய தகவல்கள் றோவினாலேயே புலிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் கூட ஒரு பேச்சு அந்த நேரத்தில் அடிபட்டது.
ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட வதந்திகள், பேச்சுக்கள் அனைத்தையும் கடந்து உண்மையில் என்ன நடந்தது என்கின்ற சரியான தகவல்கள் ஊடகங்களில் பெரிதாக வெளிவில்லை என்றுதான் கூறவேண்டும்.
புளொட் முக்கியஸ்தர்கள் மீதான புலிகளின் தாக்குதலின் உண்மையான பின்னணி என்ன? உண்மையிலேயே என்ன நடந்தது? – இந்த விடயம் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.


புளொட் அமைப்பினர் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் பற்றியும், அந்தத் தாக்குதலின் பின்னணி பற்றியும் நாம் பார்ப்பதானால், முதலில் அந்தக் காலகட்டத்தில் புளொட் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி மேலோட்டமாகப் பார்ப்பது நல்லது என்றது என்று நினைக்கின்றேன்.
புளொட்டின் புதிய பின்னணி
இந்தியப்படையினர் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப்., டெலோ, ஈ.என்.டி.எல்.எப். போன்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து ‘திறீ ஸ்டார்| என்ற பெயரில் இந்தியப்படையினரால் களமிறக்கப்பட்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொள்வதே இவர்களது பிரதான செயற்பாடாக இந்தியாவின் ‘றோ| அமைப்பினால் திட்டமிடப்பட்டிருந்தது. (இந்த தமிழ் ஆயுத அமைப்பினது சில நடவடிக்கைகளை முன்னர் பார்த்திருந்தோம்)
இதேவேளையில், அக்காலப்பகுதியில் ‘புளொட்| அமைப்பும் தமிழ் பிரதேசங்களில் அதிக அளவில் ஊடுருவி நிலை கொள்ள ஆரம்பித்திருந்தது. ‘புளொட்| அமைப்பின் நடவடிக்கைளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தன.
ஆனால் ‘புளொட்| அமைப்பின் செயற்பாடுகளின் பின்னணி, மற்றய தமிழ் இயக்கங்களின் பின்னணியில் இருந்து மாறுபட்டு காணப்பட்டது.
‘புளொட்| அமைப்பின் செயற்பாடுகளுக்குப் பின்னால் இந்திய ஷறோ|வின் கைகள் நிச்சயமாக இருக்கவில்லை.
‘புளொட்| இற்கு அக்காலத்தில் அனுசரனை வழங்கிக்கொண்டிருந்தது வேறொரு தரப்பு.
எவருமே எதிர்பார்க்காத வகையில், ‘புளொட்| அமைப்பு ஸ்ரீலங்கா அரசிடம் அனுசரனைகளைப் பெற்றே அக்காலகட்டத்தில் செயற்பட ஆரம்பித்திருந்தது.

கையறு நிலையில் ‘புளொட்|:
புலிகளைப் போலவே ‘புளொட்| அமைப்பும் ஆரம்பம் முதலே இந்தியாவின் கைகளுக்குள் சிக்கவில்லை.
இந்தியா வழங்கிய பயிற்சிகளைப் ‘புளொட்| பெற்றிருந்தாலும், இந்தியாவின் கைக்கூலிகளாக அவர்கள் செயற்படத் தலைப்படவில்லை. அதனால் ஈழத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே ‘புளொட்| அமைப்பு பலவழிகளிலும் இந்தியாவினால் ஓரங்கட்டப்பட்டே வந்தது.
இந்தியப்படை இலங்கைக்கு வருவதற்கு சிறிது காலத்தின் முன்னர், ‘புளொட்| அமைப்பு ஈழத்தில் தனது போராட்டத்தை விரைவுபடுத்துவதற்கு என்று வெளிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்திருந்த பெரும் தொகை ஆயுதங்கள் தமிழ் நாட்டுக் கரையில் வந்திறங்கிய போது, இந்தியா அதனைக் கைப்பற்றியிருந்தது. அதேபோன்று தமிழ் நாட்டில் பலவழிகளிலும் ‘புளொட்| அமைப்பிற்கு எதிராக தனது நடவடிக்கைகளை இந்தியா முடுக்கிவிட்டிருந்தது.
அதேவேளை, அளவிற்கதிகமான போராளிகளை உள்வாங்கிவிட்ட நிலையில் அவர்களைப் போஷிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த ‘புளொட்| அமைப்பினுள், உள் முரன்பாடுகளும் தலைவிரித்தாட அரம்பித்திருந்தன. திறமையான பல போராளிகள் புளொட் அமைப்பினுள் காணப்பட்டிருந்த போதிலும், சரியான வழிநடத்தல்கள் இல்லாத காரணத்தால் புளொட் அமைப்பு சரியானமுறையில் இயங்கமுடியாத ஒரு அமைப்பாகவே மாறி இருந்தது.
உட்படுகொலைகள், தலைமைத்துவ ஊழல்கள், கீழ்மட்டப் போராளிகளிடையேயான வறுமை, கந்தசாமி அணியினர் ஆடிய தாண்டவம் என்பன, ‘புளொட்| அமைப்பை பலவழிகளிலும் செயற்படமுடியாத ஒரு அமைப்பாக மாற்றியிருந்தது.
கட்டுப்பாடிழந்த நிலையில் விரக்தியுடன் கூடிய பல போராளிகள் தமிழ் நாட்டில் சமுக விரோத செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்கள்.


இந்தச் சந்தர்ப்பத்தில் புளொட்டிலிருந்த ஒரு முக்கிய தளபதியான பரந்தன் ராஜன் என்பவர் இந்திய ‘றோ| அமைப்பினால் உள்வாங்கப்பட்டு, முக்கிய போராளிகள் அடங்கிய ஒரு குழுவுடன் ஈ.என்.டி.எல்.எப்.(Eela National Democratic Liberation Front- ENDLF)என்ற அமைப்பை ஸ்தாபித்துச் சென்றுவிட, எஞ்சிய ‘புளொட்| அமைப்பு செயற்பட முடியாத அளவு தனித்து நிற்கவேண்டி இருந்தது.
ஆரம்பம் முதலே புலிகளுக்கு எதிராக ‘புளொட்| மிகவும் தீவிரமாகச் செயற்பட்டுவந்த அமைப்பென்ற காரணத்தினால், புலிகளுடனும் கைகோர்த்துக்கொள்ள முடியாத நிலை ஷபுளொட்டிற்கு இருந்தது. அத்தோடு, புலிகள் அமைப்பு மீது ஜென்மப் பகை கொண்ட ஒரு அமைப்பாகவே ‘புளொட்| அமைப்பும், அதன் தலைமையும் செயற்பட்டு வந்திருந்தது.
‘புளொட்| அமைப்பின் இந்த கையறு நிலையை ஸ்ரீலங்கா அரசு நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டது.
இந்தியப் படையின் வருகையின் பின்னர், எதுவுமே செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த ‘புளொட்| தலமையை தொடர்பு கொண்ட ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி, ‘புளொட்| அமைப்பிற்கு அபயம் அளிப்பதற்குத் தாம் விரும்புவதாக தெரிவித்தார்.
அப்பொழுது ஈழமண்ணில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த புலிகள் மற்றும் இந்தியா- என்ற தமது இரண்டு எதிரிகளையும் மீறி, எவ்வாறு அங்கு மீண்டும் கால்பதிப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்த ‘புளொட்| அமைப்பின் தலைமைக்கு, அத்துலத் முதலியின் அழைப்பு ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே இருந்தது.
ஸ்ரீலங்கா அரசின் அழைப்பின் பெயரில் ‘புளொட்| அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பிற்கு வந்தார். ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியுடன் பல பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். இதனைத் தொடர்ந்து, ‘புளொட்| அமைப்பு கொழும்பில் பல முகாம்களை அமைக்க ஆரம்பித்தது. பெருமளவு போராளிகள் அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா படை அதிகாரிகளுடன் இணைந்து செயற்படவும் ஆரம்பித்தார்கள்.
ஸ்ரீலங்காவை திருப்திப்படுத்த புலிகள் மீது பாய்ச்சல்:
வவுனியாவிலும் பல ‘புளொட்| முகாம்கள் அமைக்கப்பட்டன. அப்பொழுது வவுனியாவில் தங்கியிருந்த மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, வவுனியாவில் ‘புளொட்| அமைப்பு முகாம்களை அமைக்க உதவி புரிந்தார். மாணிக்கதாசன் தலைமையில் வவுனியாவில் புளொட் அமைப்பு காலூன்ற ஆரம்பித்தது.


இதேபோன்று மட்டக்களப்பிலும், ‘புளொட்| அமைப்பின் அரசியல்துறைச் செயலாளர் வாசுதேவா மற்றும் பொறுப்பாளர் சுபாஸ், சிவராம் போன்றவர்கள் தலைமையில் அந்த அமைப்பு காலூன்ற ஆரம்பித்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு போராளிகள் ‘புளொட்| அமைப்பில் இருந்ததால், அந்தப் போராளிகளின் பெற்றோர், உறவினர்களை சந்தித்து தமது அமைப்பிற்கு ஆதரவு தேடிக்கொள்ளும் எண்ணத்துடனும், தமது அமைப்பை மீளவும் கட்டியெழுப்பும் நோக்கத்துடனும், செயற்பட ஆரம்பித்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்திலேயே மன்னாரில் புலிகள் அமைப்பு மீது ‘புளொட்| தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
அந்தத் தாக்குதலில் கில்மன், அர்ச்சுனா, ரஞ்சன் என்ற மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். புலிகள் மீது புளொட் உறுப்பினர்கள் காலாகாலமாக கொண்டிருந்த பகை உணர்வின் வெளிப்பாடாக அந்தத் தாக்குதல் இருந்தாலும், தமது புதிய எஜமானர்களாகிய ஸ்ரீலங்காப் படையினரைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஷபுளொட்| அந்தத் தாக்குதலை அப்பொழுது மேற்கொண்டிருந்தது.

புலிகளின் பதிலடி:
தமது உறுப்பினர்கள் மீது ‘புளொட்| அமைப்பு மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றி இந்தியப் படையினரிடம் தமது முறைப்பாட்டை தெரிவித்த புலிகள் சம்பந்தப்பட்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடு;க்கவேண்டும் என்று கோரினார்கள். இந்தியப்படை எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராத காரணத்தினால், புலிகள் ஷபுளொட்டிற்கு பதிலடி கொடுக்க தயார் ஆனார்கள்.
மன்னாரில் ‘புளொட்| அமைப்பு மீது புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50 இற்கும் அதிகமான புளொட் உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மட்டக்களப்பிலும் ‘புளொட்| அமைப்பிற்கு எதிராக தாக்குதல்களை நடாத்தவேண்டும் என்ற முடிவை புலிகள் எடுத்திருந்தார்கள்.
அதிலும் புளொட் அமைப்பின் ஒரு குறிப்பிட்ட முக்கியஸ்தரைக் குறிவைத்து தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என்று மட்டக்களப்பில் உள்ள புலிகள் தீர்மானம் எடுத்தார்கள். அந்த குறிப்பிட்ட புளொட் முக்கியஸ்தரைக் குறிவைத்து அவர்கள் தேடித்திரியவும் ஆரம்பித்தார்கள்.
இதற்கு முக்கிய காரணம்: கருணா.
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவினால் அந்த நேரத்தில் குறிவைக்கப்பட்ட புளொட் முக்கியஸ்தின் பெயர்: பவாணந்தன்.
அந்த நேரத்தில் ‘புளொட்| அமைப்பின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இருந்தார் பவாணந்தன். அவரது இயக்கப்பெயர் சுபாஸ். 1978ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த பவாணந்தன்;, தனிப்பட்ட ரீதியில் பல கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு புலிகள் அமைப்பில் இருந்து விலக்கப்பட்டார்.
புலிகளால் தேடப்பட்டநிலையில் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரணடைந்து சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது, 1983ம் ஆண்டு மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பித்து இந்தியா சென்று புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். புலிகள் அமைப்பில் இருந்து ஏற்கனவே பிரிந்து புளொட் அமைப்பை ஸ்தாபித்திருந்த உமாமகேஸ்வரனுடன் அவருக்கு இருந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி புளொட் அமைப்பில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
இந்தியப்படையின் வருகையைத் தொடர்ந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்த பாவாணந்தன்(சுபாஸ்) புலிகள் அமைப்பிற்கு மிகுந்த சாவாலாகவே செயற்பட்டார். அதுவும் சிறிலங்கா அரச படைகளின் தொடர்பு, பின்னணி என்பன இவருக்கும், இவர் சார்ந்த பிரிவினருக்கும் இருந்ததால், மட்டக்களப்பில் புலிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலை இவரால் தொடர்ந்து ஏற்படுத்த முடிந்தது.


இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் பவாணந்தனுக்கும், புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு தளபதியாக அந்த நேரத்தில் இருந்த கருணாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. கருணாவுக்கு அந்த நேரத்தில் 21 வயது. கருணாவையும், புலிகள் அமைப்பையும் மிகக் கேவலமாக விமர்சித்தார் பவாணந்தன். ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் முற்றி கருணாவை சுட்டுவிடும்படி தனது போராளிகளுக்கு கட்டளை பிறப்பித்தார் பவாணந்தன். கருணாவுடன் துணைக்குச் சென்ற அர்ஜூனா என்ற போராளி நிலமையைச் சமாளித்து கருணாவை அழைத்துக்கொண்டு திரும்பி வந்தார்.
இந்தச் சம்பவம் கருணாவை மிகவும் பாதித்திருந்தது. பவாணந்தனை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று நினைத்த கருணா, பவாணந்தனை குறிவைக்கும்படி தனது பேராளிகளுக்கு கட்டளை பிறப்பித்தார்.
பவாணந்தனின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் கவனமாகத் திரட்டப்பட்டன புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால்.
குழப்பப்பட்ட புலிகளின் பொதுக்கூட்டம்
1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியப்படைகள் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை புலிகள் பகிரங்கமாக வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். திலீபன் யாழ் கோட்டையில் ஆற்றிய உரையில் இதனை முதன் முதலில் வெளியிட்டிருந்தார். அதேவேளை வடக்கு கிழக்கு முழுவதிலும் இந்தியப்படையனருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வந்தன. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் புலிகள் ஒரு பாரிய பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா, அரசியல்துறைப் பொறுப்பாளர் யோகரட்ணம் யோகி போன்றவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்பாடாகியிருந்தது.
ஆனால் இரண்டு காரணங்களினால் இந்தப் பொதுக்கூட்டம் கைவிடப்பட்டது.
முதலாவது காரணம் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவென வருகைதரும் விடுதலைப் புலி முக்கியஸ்தர்களைப் படுகொலைசெய்ய புளொட் அமைப்பு திட்டமிட்டிருந்ததாக புலிகளின் புலனாய்வுத் துறை தெரிவித்திருந்தது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த திலீப்(சொந்தப் பெயர்: திருச்செல்வம்) மற்றும் நீலன் போன்றவர்கள் இந்தத் தகவலை புலிகளின் தலைமைக்கு அறிவித்திருந்தார்கள். புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யும் நோக்குடன் புளொட் அமைப்பின் இராணுவச் செயலாளர் கண்ணன் மட்டக்களப்பிற்கு வருகைதந்திருப்பதாகவும் அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக பொதுக்கூட்டம் நடைபெற இருந்த தினத்தில் சிறிலங்கா அரசாங்கம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்தக் காரணங்களினால் புலிகள் ஏற்பாடு செய்த பாரிய பொதுக்கூட்டம் தடைப்பட்டிருந்தது.
இதுவும் மட்டக்களப்பில் புலிகள் அமைப்பிருக்கு புளொட் மீது பாரிய கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.
புளொட் அமைப்பினருக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும் எற்று தீர்மானம் எடுத்தார்கள் புலிகள்.
தாக்குதல்
1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ம் திகதி பாவணந்தன் தனது நன்பர்களுடன் பாசிற்குடா சென்று திரும்புவதாக கருணாவுக்கு தகவல் கிடைத்தது.
‘பாவாணந்தனை போடுங்கள். நான் அங்கு வந்துகொண்டிருக்கின்றேன்’ உத்தரைவை கருணா கிரானில் இருந்த போராளிகளுக்கு தொலைத்தொடர்பில் அறிவித்தார்.
அந்த நேரத்தில் கிரான் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த கப்டன் ரதீஷ் மற்றும் சாண்டோ என்ற போராளி உட்பட ஒரு சிறு குழு பாவணந்தன் பயணம் செய்த வாகனம் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள்.
கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர்களின் உடல்கள் கிரான் சந்தியில் கருணாவினால் பார்வையிடப்பட்டது. பவாணந்தனைத் தவிர மற்றவர்களை புலிகளுக்குத் தெரியவில்லை.

மட்டக்களப்பில் இருந்து கிராணுக்கு வந்த அரசியல்துறைப் போராளிகள்தான் கொல்லப்பட்டவர்களில் ஷபுளொட்| அமைப்பின் அரசியல் துறைச் செயலாளர் வாசுதேவாவையும் மற்றய சிலரையும்; அடையாளம் காண்பித்தார்கள்.
கொல்லப்பட்டவர்களில் புளொட் அமைப்பின் இராணுவத்துறைச் செயலாளர் கண்ணனும்; அடங்கியிருந்தது பின்னரேயே புலிகளுக்குத் தெரியவந்தது. பொதுக்கூட்டத்திற்கு வருகை தர இருந்த புலி முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்காக கண்ணன் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளதாக புலிகளின் புலனாய்வுத்துறை ஏற்கனவே வழங்கியிருந்த தகவலை கண்ணனின் உடல் ஊர்ஜிதப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில்; ‘புளொட்| அமைப்பிற்கு எதிராக புலிகள் பாரிய தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்தார்கள். இந்த நடவடிக்கையில் 70 இற்கும் அதிகமான ‘புளொட்| உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் புளொட் உறுப்பினர்கள் துரத்தித் துரத்தி புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள்.
புலிகளால்; ‘புளொட்| அமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதலை இந்தியப்படை வேடிக்கை பார்த்தபடி இருந்தது. இந்தியப்படையினரைப் பொறுத்தவரையில், இந்த இரு அமைப்புக்களுமே அவர்களுக்கு வேண்டப்படாத அமைப்புக்களாகவே இருந்தன.
தொடரும்…

பகிரல்

கருத்தை பதியுங்கள்