தோல்விகண்ட வல்லரசுகள்:

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-46) – நிராஜ் டேவிட்

இருபதாம் நூற்றாண்டின் போரியல் வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது, அதில் நான்கு மிகப் பெரிய இராணுவத் தோல்விகள் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

உலகின் மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்புகளுக்கு சரித்திரத்தில் ஏற்பட்ட மிகவும் மோசமான தோல்விகள் என்று நான்கு சந்தர்ப்பங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றன.
முதலாவது: அமெரிக்கப்ப படைகளுக்கு வியட்னாமில் ஏற்பட்ட மிக மோசமான தோல்வி.
இரண்டாவது: சீனப் படையினருக்கு கம்போடியாவில் ஏற்பட்ட தோல்வி.

மூன்றாவது: சோவியத் படையினருக்கு அப்கானிஸ்தானில் ஏற்பட்ட தோல்வி.
நான்காவது இந்தியப் படையினருக்கு ஈழத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி.

உலகின் மிகப் பெரிய நாடுகளின் பலம் வாய்ந்த இராணுவத்தினருக்கு சிறிய கெரில்லாப் படையினரிடம் ஏற்பட்ட மிக மோசமான தோல்விகளாக இவை சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒப்பீட்டளவில் மிகச் சிறியதும், எண்ணிக்கையில் குறைந்ததும், ஆயுத தளபாட வசதிகளற்றதுமான சிறிய கெரில்லாக் குழுக்கள், தமது மன உறுதியையும், மக்கள் ஆதரவையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு போரிட்டு, உலகின் மிகப் பெரிய சக்திகளை புறமுதுகு காண்பித்து ஓட்டமெடுக்கச் செய்திருந்த சந்தர்ப்பங்களாக இவற்றைச் சரித்திரம் பதிவு வைத்துள்ளது.
அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் படைகள் புரிந்ததான யுத்தங்கள் பற்றிப் பார்த்தோமானால், அவற்றில் பல ஒற்றுமைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இந்த நாடுகள் அனைத்துமே தமக்காக யுத்தம் புரியவில்லை. வேறொரு தரப்பினருக்காகவே இந்த நாடுகளின் படைகள் களம் இறங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாட்டின் படைகள் களம் இறங்குமுன்னதாக, அவர்கள் தங்களது எதிரிகள் பற்றி நன்றாகவே அறிந்துவைத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் தமது எதிரியின் உண்மையான பலம் பற்றி சரியாகக் கணிப்பிடவில்லை. அவர்கள் தமது வரலாற்றில் படித்திராத பாடங்கள் பலவற்றை யுத்த முனைகளில் கற்கவேண்டி எற்பட்டது.
இறுதியில் இந்த நான்னு பாரிய நாடுகளின் இராணுவங்களும் யுத்தத்தை முடித்துக்கொண்டு தத்தமது நாடுகளுக்கு திரும்பும்போது, இனிமேல் இந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை என்ற தீர்மாணத்துடன்தான் திரும்பியிருந்தார்கள்.
அதேவேளை இந்த பெரிய நாடுகளின் படைகளுடன் யுத்தம் புரிந்த கெரில்லா அமைப்புக்களோ, யுத்த முடிவில் பாரிய பலத்தை பெற்றவைகளாக மாறியிருந்தன.
பல மடங்கு வளர்ச்சி அடைந்திருந்தன. அதிகமாக ஆயுத வளத்தைப் பெற்ற அமைப்புக்களாக மாறியிருந்தன. சர்வதேச நன்மதிப்பைப் பெற்றுப் பிரபல்யமடைந்திருந்தன. பரவலான மக்கள் ஆதரரைப் பெற்றவையாகவும் ஆகிவிட்டிருந்தன.

ஈழ யுத்தம்:
இதில் ஈழத்தில் இடம்பெற்ற இந்தியாவின் யுத்தத்தை எடுத்து நோக்கினால், இந்தியப் படையினர் – விடுதலைப் புலிகள் – இருவருக்குமே பாரிய இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. புலிகளால் அந்த இழப்புக்களை ஜீரனித்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால் இந்தியாவினாலோ அதற்கேற்பட்ட இழப்புக்களை தாங்கிக்கொள்ளமுடியாது போய்விட்டது. இதுவே ஈழத்தில் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாரிய தோல்வி என்று குறிப்பிடப்படுகின்றது.
ஈழயுத்தத்தைப் பொறுத்தவரையில் அந்த யுத்தத்தை தாம் விரும்பியபடி தமது போக்கிற்கு இழுத்துச் செல்லும் சக்தியை விடுதலைப் புலிகள் பெற்றிருந்தார்கள். இந்தியாவினால் அது முடியாமல் இருந்தது. ஒரு கால வரையறையை வகுத்துக்கொண்டு, அல்லது ஒரு திட்ட வரைபை மேற்கொண்டு இந்தியாவினால் எதுவுமே காரியமாற்ற முடியாமல் இருந்தது. அவ்வாறு செய்வதற்கு களமுனைகளில் புலிகள் அனுமதியளிக்கவும் இல்லை.
விடுதலைப் புலிகளுக்கும்-இந்தியப்படையினருக்கும் இடையிலான யுத்தம் பற்றிக் குறிப்பிடும் பிரபல விமர்சகர் ஒருவர்: ‘இந்தியப் படைகளின் எதிரிகள் (புலிகள்) அனைத்து இடங்களிலும், அனைத்து நேரமும் காணப்பட்டார்கள். ஏனெனில் அந்த மண் அவர்களுடையதாக இருந்தது. அந்த மண்ணின் ஒவ்வொரு அங்குலம் பற்றியும் அவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் தமிழ் மக்களின் கதாநாயகர்களாக இருந்தார்கள்ள. ஏனெனில் அந்த மக்கள் மத்தியில் இருந்தே அவர்கள் உருவாகியிருந்தார்கள். அவர்கள் தமிழ் மக்களால் வழி நடத்தப்பட்டவர்களாகவும், தமிழ் மக்கள் மத்தியில் தங்கியிருப்பவர்களாகவும், தமிழ் மக்களின் பூரண ஆதரவைப் பெற்றவர்களாகவும் காணப்பட்டார்கள்| என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியப் படைகளுக்கு இருந்த சிக்கல்கள்:
புலிகளுடனான இந்தியப் படைகளின் யுத்தம், அமெரிக்கா, சீனா, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளின் இராணுவம் மேற்கொண்ட யுத்தங்களில் இருந்து சில வகைகளில் வேறுபட்டதாகவும் இருந்தன.
முதலாவதாக, இந்தியப் படைகள் சுமார் இரண்டு வருட காலமாகப் போர் புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது, அடிப்படையில் இந்தியாவினாலேயே பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பிற்கு இந்தியாவினாலேயே ஆயுதமும் வழங்கப்பட்டிருந்தது. இந்தியாவின் முக்கிய புலனாய்வுப் பிரிவான ரோ| (RAW) இனாலேயே விடுதலைப் புலிகளின் யுத்த நுனுக்கப் பயிற்சிகளின் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, இந்தியாவின் போரியல் நுனுக்கங்கள், இந்தியப் படையினரிடமுள்ள ஆயுத விபரங்கள், அவர்களது மனோதத்துவங்கள் என்பன பற்றி புலிகள் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள். இந்தியப் படை வீரர் ஒருவரின் மனோநிலை எவ்வாறு இருக்கும், அவரது பலம் என்ன, பலவீனம் என்ன என்பது பற்றி புலிகள் அமைப்பினர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்.


அதேவேளை, விடுதலைப் புலிகள் தொடர்பாக இந்தியப் படையினர் கொண்டிருந்த அறிவு போதுமானதாக இருக்கவில்லை என்றே இந்தியப் படை அதிகாரிகள் பின்நாட்களில் குறிப்பிட்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியப் படைகளிடம் இருந்து தமது ஆரம்பகாலப் பயிற்சிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் தமக்கே உரிய பாணியில் தமது யுத்த தந்திரோபாயங்களை வடிவமைத்திருந்தார்கள். உலகின் தலை சிறந்த கெரில்லா யுத்தங்களில் காணப்பட்ட பல வெற்றிகரமான நுனுக்கங்களையெல்லாம் உள்வாங்கியிருந்தார்கள். கெரில்லாப் போரில் பல புதிய யுக்திகளைக் கண்டு பிடித்து, பரிட்சித்துப் பார்த்து உள்வாங்கி இருந்தார்கள்.
புலிகள் அமைப்பில் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த மாற்றங்கள் களமுனையில் இந்தியப் படையினருக்கு அதிக அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாகவே இருந்தன.
இந்தியப் படை புலிகளுடன் நேரடி யுத்தத்தில் குதிப்பதற்கு முடிவு செய்து, அதற்கான ஆலோசனைகளை இந்திய புலனாய்வு பிரிவான ‘றோ| இடம் கோரிய போது, ‘பிரபாகரனும் அவரது போராளிகளும் நகரப் புறங்களில் சண்டைகள் புரிவதற்கு தோதான தகமைகளை மட்டுமே கொண்டிருக்கின்றார்கள். கிராமங்களிலும், காடுகளிலும் அவர்களால் அவ்வளவாகச் செயற்பட முடியாது| என்று ‘றோ| தெரிவித்திருந்தது.

ஆனால் யுத்த களத்தில் ‘றோ| அமைப்பின் இந்த அனுமாணம் பொய்த்திருந்தது. நகரங்கள், கிராமங்கள், காடுகள், வயல்கள் என்று இந்தியப் படைகள் கால்வைத்த அத்தனை இடங்களிலும், விடுதலைப் புலிகள் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். ஈழ மண்ணில் இந்தியப் படைகள் வைத்த ஒவ்வொரு அடியும் மரணத்தை நோக்கியதாகவே இருந்தது.
இந்தியப் படையினரின் போரியல் நுனுக்கங்கள் பற்றிய வரைபுகளை மேற்கொண்ட அறிஞர்கள், ஈழ யுத்தத்திற்கு பின்னர் தமது வரைபுகளில் பல மாற்றங்களையும், புதிய பல விடயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு, ஈழ மண்ணில் அவர்கள் பல அவலங்களையும், ஆச்சரியங்களையும் சந்தித்தார்கள்.
தமது போரியல் யுக்திகளில் பல மாற்றங்களைச் செய்தேயாகவேண்டிய பல அனுபவங்களை அவர்கள் ஈழ மண்ணில் பெற்றிருந்தார்கள்.


மொத்தத்தில் இந்தியா வருந்தி அழைத்துக்கொண்ட விடுதலைப் புலிகளுடனான யுத்தம், இந்தியத் தரப்பினருக்கு சிம்ம சொப்பன அனுபவத்தையே பெற்றுத்தந்திருந்தது.
புலிகளுடனான யுத்தத்தை எதற்காக ஆரம்பித்தோம் என்று ஒவ்வொரு இந்திய அரசியல்வாதியும், ஒவ்வொரு இந்திய இராணுவ அதிகாரியும் – ஏன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இன்றளவிற்கும் வருந்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
புலிகளுடனான இந்தியாவின் யுத்தம் சர்வதேச அரங்கிலும், உலகின் சரித்திரத்திலும் அந்நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழுக்கை பெற்றுக்கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
உலகின் தலைசிறந்த இராணுவங்களுள் ஒன்றான இந்திய இராணுவத்துடன், ஒரு சிறிய கெரில்லாப்படை ஈழ மண்ணில் மேற்கொண்ட ஒப்பற்ற யுத்தம் பற்றியும், அந்த யுத்த முனைகளில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவங்கள், திருப்பங்கள் என்பன பற்றியும் இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்க உள்ளோம்.
யுத்த தர்மங்களை மீறி, காந்தியின் தேசம் மேற்கொண்ட துரோக நடவடிக்கைகள் பற்றியும் ஆராய உள்ளோம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்